BIL நிலம் புரிந்துகொள்ள வேண்டியவை!
பஞ்சம நிலம் , பூமிதான நிலம், அனாதீன நிலம், என்றெல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். அதென்ன “BIL” நிலம் என்று நெற்றி சுருக்குகின்றீர்களா? “BIL” நிலத்தை பேச்சுவழக்கில் “BL” நிலம் என்றே சொல்லபடுகிறது. நிலங்கள் “BIL” நிலம் என்பதை கேட்டால் ஏதோ வக்கீலுக்கு படிச்ச நிலம் என்று குழப்பம் அடையாதீர் . BIL என்பதின் விரிவாக்கம் BOUGHT IN LAND ஆகும்.
BIL நிலமும் ஒரு வகையான அரசின் அனாதீன நிலமே ! அதாவது அரசுக்கு தொடர்ந்து யாரும் வழிகாட்டாத போதும், அல்லது அரசுக்கு கடன் கொடுக்க வேண்டியதை கொடுக்காமல் போனாலும், அரசுக்கு ஏதாவது ஒரு வகையில் தண்டம் கட்ட வேண்டி இருந்து கட்டாமல் போனாலும் அரசு அவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்யும்.
ஜப்தி என்பது அரசின் கடன்தாரர் நிலங்களை ஏலம் விற்பனை நடத்தி அரசுக்கு வரவேண்டிய பணத்தை மீட்டு கொள்ளுவது ஆகும். அப்படி ஏலம் நடக்கயில் யாருமே ஏலம் எடுக்காத நிலையில் அரசே அந்த இடத்தை வாங்கி கொள்ளும் . அதுவே BOUGHT IN LAND ஆகும்.
அரசு ஒரு நிலத்தை தாமே ஏலம் எடுக்கும் போது ஒரு தொகை நிர்ணயிக்கும் , அனைத்தையும் அந்த ஏலத்தில் கட்டாது. வார கடனில் வரவு வைத்துவிடும். (ஆக அரசு அந்த நிலத்திற்கு கைகாசு போட்டு எடுத்து கொள்ளாது. ஏலம் வந்து ஏலம் மாறி நடக்கும் என்று வைத்து கொள்ளுங்கள்.
இப்படி அரசு வாங்கிய நிலத்தை 2 வருடம் BIL நிலம் என்றே வகைபடுத்தி வைத்து இருக்கும். அந்த 2 வருடத்திற்குள் நிலத்தை இழந்த நபரோ, அல்லது அவரின் வாரிசுதாரர்களோ கட்ட வேண்டிய தொகை மற்றும் தண்டம் எல்லாம் சேர்த்து மீட்டு கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
அப்படி 2 வருடம் கழித்தும் அந்த இடம் மீட்கப்படவில்லை என்றால் அரசு அதனை தரிசு புறம்போக்காக நிலவகையை மாற்றி வைத்து கொள்ளும் பின்பு அதனை நிலமில்லாதவர்களுக்கு ஒப்படை செய்யலாம். ஆக ஏலம் எடுத்ததில் இருந்து தரிசு புறம்போக்காக மாற்றும் வரை இருக்கின்ற காலத்தில் அதனை BIL நிலம் என்று அழைப்பர்.
இந்த நிலங்கள் அதிகமாக நான் என் கள வேலைகளில் எங்கு பார்த்து இருக்கிறேன் என்றால் திருவள்ளூர் மாவட்டம், திருவலங்காடு சுற்று வட்டார பகுதிகளில் நிறைய பார்த்து இருக்கிறேன்.
இந்த பகுதிகளில் காவேரி ராஜபுரம் , வியாசபுரம், போன்ற கிராமங்களில் ஆயிரகணக்கான ஏக்கர் BIL நிலம் இருக்கிறது. இந்த பகுதி ஆரம்பகட்டத்தில் ஆந்திர மாநிலத்திலும் பிறகு தமிழ் நாட்டிலும் மொழி வாரி மாநிலங்களில் பிரிக்கும் போது இருந்தது. அப்பொழுது தெலுங்கு பேசும் மக்கள் தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவிற்கு இடம் பெயர்ந்து இருக்கிறார்கள் . அப்பொழுது இந்த நிலங்களை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு சென்று இருக்கிறார்கள். அரசும் தொடர்ந்து வரி கட்டாமல் இருந்த நிலம் என்பதால் அதனை BILL நிலம் என்றே வகைபடுத்தி வைத்துவிட்டது.
ஆனால் அந்த BILL நிலங்களில் DTCP அங்கீகார வீட்டுமனைகள் பல உருவாகி ககிரைய பத்திரங்கள் ஆகி இருக்கின்றன. பல நிலங்களில் ஏக்கர் கணக்கில் கைமாறி பத்திரம் நடந்து இருக்கிறது. யாருக்குமே இதுவரை பட்டா கிடைக்காமல் இருக்கிறது. தற்பொழுது தான் பதிவுத்துறை தடை செய்துள்ளது. இதற்கு முன் பட்டா இல்லாத BILL நிலங்களில் போடப்பட்ட பல வீட்டுமனைகளை அப்பாவி நடுத்தர மக்கள் வாங்கி வைத்து கொண்டு அவதிபடுகின்றனர்.
BILL நிலங்களும் ஒரு வகையில் அரசின் நிலங்களே . எனவே அந்த நிலங்களில் வீட்டுமனைகள் , தோட்டங்கள் இருந்தால், நிச்சயம் வாங்காமல் தவிர்த்துவிடுங்கள். பத்திரம் எல்லாம் இருக்கிறது என்று யோசிக்காதீர்கள் ! அப்படி கிரைய நிலத்திற்கு பட்டா கிடைக்காத நிலத்தை வைத்து கொள்ள வேண்டி இருக்கும்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :
9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )
இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3
#BIL #நிலம் #பஞ்சமநிலம் #பூமிதானநிலம் #அனாதீனநிலம் #ஜப்தி #ஏலம் #தரிசு #ஏக்கர் #DTCP #அங்கீகாரம் #பட்டா #வீட்டுமனை #deed #housing-plot #land #acre #approved #property #praptham #paranjothipandian
Comments
Post a Comment