பஞ்சமி நிலம் புரிந்து கொள்ளப்பட வேண்டிய … விஷயங்கள் !

index-1


இந்தியாவில் சாதிய படிநிலை அடக்குமுறை காலம் காலமாக இருந்து வருவதை அறிந்ததே ! ஆயிரம் உண்டு இங்கு சாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி ! என்று நாங்கள் எங்களுக்கு கீழே அடிமைகளை வைத்து இருப்போம்.அதெல்லாம் கேட்க கூடாது , ஆனால் சாதி இந்துக்களை வெள்ளைக்காரன ஆன நீ எப்படி அடிமைபடுத்தலாம் என்று கேட்ட ஞானவான்கள் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டு இருக்கிற நாடு இந்த நாடு.
விளிம்பு நிலையில் இருக்கின்ற மக்களுக்கு கல்வி கற்க தடை , பொருளாதார தடை, சொத்து வைத்து இருக்க தடை மேற்படி தடைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, செயல்படுத்துவதன் மூலம் அவர்களை பண்ணை அடிமைகளாக , அடிமை கூலிகளாக ஆண்டாண்டுகாலம் வைத்து இருக்கலாம் என்ற ஆண்டை கண்ணோட்டத்துடன் தான் சுதந்திர இந்தியாவின் அன்றைய தலைவர்கள் முதல் இன்றைய தலைவர்கள் வரை DC land ஐ பொறுத்தவரை இருகிறார்கள்.

ஓலை குடிசை வீட்டில் குடித்தனம் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுடைய சமையல் பாத்திரங்கள் கழுவி ஊற்றும் இடத்தில் தானாக முளைத்த மிளகாய் செடிகளில் மிளகாயை பறித்து உண்ண கூட அவர்களுக்கு உரிமை இல்லை! அதனை ஆண்டைகளிடம் கொடுத்து விட வேண்டும் .
அவர்களை கேட்காமல் அந்த இடத்தில மிளகாய் செடி வைத்ததற்காக அபராதமும் அல்லது கூலி இல்லாமல் அடிமை வேலை செய்ய வேண்டும் என்று நிர்பந்தபடுத்தபட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிற மக்களை பற்றி இங்கிலாந்து ராணிக்கு 1891 இல் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டிரெமென்ஹீரே கடிதம் எழுதி இவர்களை மேம்படுத்த இம்மக்களுக்கு மண்ணு்ரிமையை வழங்க வேண்டும் என்று அதில் எழுதி இருந்தார்.
அதன்படி 1892 இல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு இந்தியா முழுவதும் இருக்கின்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக. பிரிட்டிஷ் இந்திய அரசு நிலங்களை வழங்கியது.

அப்பொழுது SC / ST என்ற அட்டவணை சாதிகள் , அட்டவணை பழங்குடியினர் எல்லாம் கிடையாது . அந்த வார்த்தைகள் எல்லாம் இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு தான் வந்தது . அப்பொழுது வெள்ளைக்காரன் சாதியால் , மதத்தால்,கடவுளால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்த பெயர் “DEPRESSED CLASS PEOPLE ” அதனால் தான் இந்த இலவச இடங்களை DC LAND என்ற பெயரில் அழைத்தார்கள்.அதனால்தான் அந்த சொல் இன்று வரை புழக்கத்தில் உள்ளது.

இந்தியாவில் இருக்கிற சாதி இந்துக்கள் , நில கிழார்கள், DC நிலம் என்று சொல்லவில்லை , நான்கு வர்ணத்திற்கு வெளியே இருக்கிற 5 ம் சாதிகாரர்களை அவர்கள் பஞ்சமர் என்று அழைகிறார்கள் அதனால் அந்த நிலங்களை பஞ்சமி நிலம் என்று சொன்னார்கள்.அதாவது வெள்ளையன் கொடுத்த பெயர் DEPRESSED CLASS LAND நம்ம நாட்டு சாதி இந்துக்கள் கொடுத்த பெயர் பஞ்சமி நிலம் “ இது தான் பெயர் காரணம்
.
இரண்டு கண்ணும் தெரியாதவங்ககிட்ட வைரக்கல்லை கொடுத்தால் அது கண்ணாடி கல்லா , வைரகல்லா என்று வித்தியாசம் தெரியாமல் விழிப்பார்கள் , அந்த வைர கல்லையும் தொலைத்து விடுவார்கள்.அப்படிதான் இந்த DC மக்கள்!!

ஒரு இனம் , மண்ணுரிமையை போராடிதான் பெற வேண்டும் என்ற எண்ணம் வந்து போராடி பெற்றிருந்தால்தான் அதனை பத்திரமாக வைத்து போற்றி பாதுகாத்து இருப்பர்.

வெள்ளையர்கள் பாவம் பார்த்து கொடுத்ததால்தான் தற்பொழுது12 லட்சம் ஏக்கர் DC நிலங்களை அந்தமக்கள் தொலைத்து விட்டனர்.
கண்ணு தெரியாத பிச்சைகாரன் தட்டில் விழுந்த சில்லறை காசுகளை கூட பிச்சைகாரனுக்கு தெரியாமல் திருடுபவர்கள் இங்கு இருக்கிற சாதி இந்துக்கள் என்பதை வெள்ளையர்கள் அப்பொழுதே புரிந்து வைத்து இருந்தார்கள்.
எனவே மேற்படி DC நிலங்களை ஒப்படைக்கும் போது அதற்கென்று பிரத்யோக கண்டிசன்களை போட்டு தான் ஒடுக்கபட்ட மக்களுக்கு ஒப்படைத்து இருகின்றனர்.

என்னவென்றால் நிலம் பெற்ற பயனாளிகள் 10 ஆண்டுகள் கழித்து தான் பிறருக்கு விற்க முடியும் . அப்படி விற்றாலும் ஒரே வகுப்பினருக்குள் தான் விற்க வேண்டும். தவறுதலாக DC நிலங்களை வேறு வகுப்பினரிடம் விற்றாலும் அதை பத்திர பதிவு துறை பதிவு செய்ய கூடாது.
அப்படி பத்திரம் செய்தாலும் எந்த காலத்திலும் அந்த நிலங்களை வாங்கியவரிடம் இருந்து பறிமுதல் செய்யலாம் .

வேறு வகுப்பினரிடம் அடமானமோ , தானமோ, குத்தகையோ, கூட செய்ய கூடாது. இப்படி நிபந்தனைகளை மீறி செய்யப்படும் உரிமை மாற்றங்கள் சட்டப்படி செல்லாது என பல கண்டிசன்கள் போட்டு வெள்ளையரகள் 12.5 லட்சம் ஏக்கர் நிலங்களை பழைய மெட்ராஸ் பிரசாடென்சியில் ஒப்படைத்தார்கள்.

இப்பொழுது நகைசுவை நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கிணத்தை காணோம்! கிணத்தை காணோம் என்று பதறுவார்களே! அதேபோல் 12.5 லட்சம் ஏக்கர் நிலத்தை காணோம்! நிலத்தை காணோம் நிலத்தை காணோம் தாலுகா அலுவகங்களில் போராட்டம் நடத்தி கொண்டு இருக்கின்றனர்கள்.
அப்போது DEPRESSED CLASS என்று வகைபடுத்தபட்ட மக்களை தற்போது SC/ST என பட்டிய மக்களுகான அலுவலகங்களில் மீட்டிங் போட்டு சொல்லி கொண்டு இருப்பார்கள்.

மேற்படி 12.5 லட்சம் ஏக்கர் நிலங்களை கொஞ்சம் கொஞ்சமாக அரசு எந்திரத்தின் உதவியுடன் சாதிஇந்து மக்கள் தற்போதைய SC/ST என வகைபடுத்தபட்ட மக்களிடம் இருந்து திருடி கொண்டு இருக்கிறார்கள் .

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக பல அரசுகள் , அதாவது பௌத்த, சமண , பிராமண , வெள்ளாள, கிறிஸ்துவ , இஸ்லாமிய பல்வெறு வகுப்பு மக்களுக்கு அப்பொழுது அப்போ இருந்த அரசர்கள் , அரசுகளிடம் இருந்து ஆயிரகணக்கான ஏக்கர் நிலங்களை இலவசமாக பெற்று கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தானம் பெற்ற நிலங்களை கல்வெட்டு, செப்பு பட்டயம், ஓலைபத்திரங்களில் ஆவணபடுதி அதற்கு ஆன்மீக மடங்களை நிறுவி , அதற்கு வாரிசுகளை உருவாக்காத ஆண்களை(துறவிகளை) பொறுப்பாக்கி மேற்படி சொத்துக்களை காலம் காலமாக நிர்வகித்து வருகிறார்கள்.
காலத்திற்கேற்றார்போல அப்போதைக்கு அப்போது வரும் அரசுகளோடு இசைந்து போய் இருக்கின்ற சொத்துக்களை காப்பாற்றி கொண்டே வந்துள்ளனர்.

மேலும் அரசின் நில ஆர்ஜிதம் , நில உச்சவரம்பு ,போன்ற எந்த சட்டங்களும் மேற்படி சொத்துக்களை பாதிக்காமல் அரசிடம் இருந்து தலைமுறை தலைமுறையாய் பாதுகாத்து வருகின்றனர்.

ஆனால் பஞ்சநிலம் பெற்ற மக்களுக்கு இப்படி ஒரு ஏற்பாடு இல்லாததால் வாங்கிய பஞ்சமி நிலத்தை முற்றிலும் தொலைத்து விட்டனர்.
1947 ஆண்டுகளுக்கு முன் இருந்த எல்லா வருவாய்துறை ஆவணங்களிலும் வெள்ளையர்கள் நிலத்தை வகைபடுத்தும் போது நஞ்சை, புஞ்சை , மானாவரி , நத்தம் , தரிசு,DC நிலம் என்று தனி தனி கலத்தில் வகைபடுத்தி கிராம அ – பதிவேட்டைஉருவாக்கி வைத்தார்கள்.

1947 ஆண்டுகளுக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக சுதந்திர இந்தியாவில் அ பதிவேட்டில் தனி கலத்தில் பஞ்சமி நிலம் என்று ஆவணபடுத்துவதை குறைத்து விட்டனர். கிராம கணக்குகள் கிராமங்களில் ஒவ்வொரு 5வருசத்துக்கு தான் மாற்றுவார்கள் , பழைய 5 வருட ஆவணங்கள் ஒழிக்கப்பட்டு விடும் . இப்படி ஒழிக்கப்படும் போது பஞ்சம நில விவரங்களையும் புதிய பதியாமல் கணக்கில் இருந்து எடுத்து விட்டனர். கொஞ் நாட்கள் கழித்து DC நிலம் எனற கலம் இல்லாமலேயே கிராம கணக்குககள் அச்சடிக்கப்பட்டது.

இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து DC நிலங்களை கிராம கணக்கில் மற்றவை என்ற கலத்தில் சிவப்பு மையில் எழுத உத்தரவிடப்பட்டது..

அதாவது முதலில் DC நிலம் என்று கலம் இருந்து அதன் பிறகு அதில் எதையும் பதியாமல் அதற்கு பிறகு கலத்தையே தூக்கிவிட்டு பிறகு மற்றவை என்ற கலத்தில் சிவப்பு மையில் எழுதி அதன்பிறகு ஆவணங்கள் கணிணி மயமாக்கி இப்பொழுது ஆலைன் ஆக்கி சிவப்பு பேனாவால் எழுத முடியாத சூழ்நிலை ஆக்கப்பட்டு DC நில கணக்குகள் பராமரிக்காமலேயே இருந்துவிட்டனர்.
மேற்படி நிலங்கள் எல்லாம் பஞ்சம நில கண்டிசங்களில் இருந்து மாறி சாதாரண நிலங்களாக மாறி பிற சாதியினருக்கு ரெவின்யூ பட்டா கொடுக்கபட்டு பொது நில வகையில் சேர்க்கப்பட்டு , பிறகு DC நிலம் அணைத்து வகுப்பினரிடமும் கைமாறி கொண்டு இருந்தது.

1985 இல் நடந்த தமிழகம் முழுவதுமான சர்வேயில் , சுத்தமாக பஞ்சம நிலங்கள் விவரங்களை தொகுக்காமலேயே விட்டு விட்டனர். திருவண்ணாமலை போன்ற சில மாவட்டங்களில் சில கிராமங்களில் கிரயம் தடை செய்ய பட்ட நிலங்கள், டிசி நிலம் எறு அ-பதிவேட்டில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

மேலும் 1985 இல் நடந்த தமிழகம் முழுவதுமான கிராம சர்வேயில் புதிய சர்வே எண்கள் கொடுக்கப்பட்டது. வெள்ளையன் கொடுத்த சர்வே எண்கள் பழைய எண்களில் தான் DC நில குறிப்புகள் பதியப்பட்டு இருந்தன. இப்படி பல வகையில் மேற்படி 12.5 லட்சம் ஏக்கர் DC நிலங்களும் பொது நிலங்களாக ஆக்கப்பட்டு பூசி மெழுகி மூடப்பபட்டு இருக்கின்றன.

1985 கள் வரை SC/ST மக்கள் கண்ணே திறக்காத நிலையில்தான் இருந்தார்கள். குறிப்பிட்ட கொஞ்சமான மக்கள் மட்டும் தான் அரசு வேலையில் இருந்தனர் அவர்களும மேட்டுகுடியை அண்டி வாழ வேண்டிய தேவையில் இருந்தனர்.
அதனால் பஞ்சம நில மீட்புகள் பற்றி யாரும் பேசவில்லை.

1990 க்கு பிறகு வந்த தலைமுறையினர் கல்வி அறிவும் விழிப்புணர்வும் பெற்றதும் பஞ்சமி நிலங்களை தேட ஆரம்பித்து ஆவணங்களை கண்டுபிடித்து அவர்களுக்கான மண்ணுரிமையை எழுத்தாலும் பேச்சாலும் , நீதி மன்ற வழக்காலும்,மக்கள்திரள் போராட்டங்களாலும் அங்கே அங்கே போராடிட ஆரம்பித்து சில மாவட்டங்களில் கொஞ்சம் நிலங்களை மீட்டுள்ளனர் .

பஞ்சமி நில சம்பந்தப்பட்ட சட்ட போராட்டங்களில் நீதி மன்றங்களில் வருவாய் துறைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக 50 க்கும் மேற்பட்ட தீர்ப்புகள் வந்துள்ளன , ஆனால் இதுவரை பெரிய மாற்றங்கள் ஏதும் நடக்கவில்லை.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு போராட ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகிறது. ஜான்தாமசு, ஏழுமலை என்ற இருவர் பஞ்சம நில போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கி சூடால் பலியாகி செங்கல்பட்டில் சமாதி ஆகி போராட்ட விதைகளாக மண்ணில் விழுந்து இருக்கின்றனர்.

ஆனால் இனிவரும் காலங்கள் அம்மக்கள் கல்வியும் விழிப்பும் அதிகமாகவே ஆகும் ஆதலால் மண்ணுரிமை கேட்டு நெருக்கடி அதிகம் கொடுக்கவே ஆரம்பிப்பர்.
இதுததான் பஞ்சமி நிலங்களின் இன்றைய நிலை.

SC/ST அல்லாதவர்கள் பஞ்சமி நிலம் என்று சொல்லபடுகின்ற இடங்களை தவிர்ப்பது மிக நல்லது.பஞ்சம நிலங்கள் என்று வகைபடுத்தபட்டு இருக்கின்றவற்றை மீட்க வேண்டும் என விரும்புகிற பட்சத்தில் அதற்கான ஆலோசனைகள் வழங்க தயாராய் இருக்கிறேன்.

குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#land #panjami #asset #paranjothipandian
#சொத்துக்கள் #சேரட்டும்!! #ஐஸ்வர்யம் #பெருகட்டும்!!

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்